28 January 2009

காதல் என்னும் கவிதை சொல்லடி...

நாங்கள் உயர்தரம் படித்துக்கொண்டிருந்த சமயம் நடந்த நகைச்சுவையான சம்பவமொன்று... நாங்கள் நண்பர்கள் எல்லோரும் ஒன்றாக கூடியிருந்து கதைத்துக் கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டுச் சுட்டிப்பையனும் அந்த இடத்தில் இருந்தான். எங்கள் செவியில் வந்து விழுந்திருந்த ஒரு காதல் விவகாரத்தைப்பற்றி நாங்கள் மும்முரமாகக் கதைத்துக் கொண்டிருந்தபோது அவனும் ஆர்வமாக வந்து கதை கேட்டான். அவனுடைய ஆர்வத்தைப் பார்த்து விட்டு நண்பனொருவன் நகைச்சுவையாக லவ் (காதல்) என்றால் என்னவென்று தெரியாது. அதுக்குள்ள ஆளப்பார்... என்றதுதான் தாமதம்... அந்தச்சுட்டி சொன்ன பதிலில் நாங்கள் தடுமாறிப் போனோம். எனக்குத் தெரியுமே... லவ்வென்றால் ஒரு அக்காவும் அண்ணாவும் ஒன்றாக போய் ஐஸ்கிறீம் (குளிர்களி) சாப்பிட்டுவிட்டு பாக் (பூங்கா) இற்கும் போய்விட்டு வருவதுதானே... எல்லாம் எங்களுடைய திரைப்படங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் விதைத்து விட்டிருக்கிற மாயத்தோற்றங்கள் தானே...

ஒருவர் காதலில் விழுந்துவிட்டால் தன்னைச் சுற்றியுள்ளவற்றின் மீதான அவருடைய பார்வை முற்றிலும் மாறிவிடுகிறது. காதலின் தாக்கம் அவர்களை எப்படியெல்லாம் பாடுபடுத்துகிறது என்பதை எழுத்தில் வடிப்பது முடியாத காரியம். அவர்களை மட்டுமா...!!! சுற்றி இருப்பவர்களையும் அல்லவா...! காதல், ஒரு அழகான வண்ணத்துப் பூச்சி போன்றது. அந்த அழகான வண்ணத்துப் பூச்சி எப்போது எந்த மலரின் மேல் வந்து அமரும் என்று சொல்லமுடியாது? காதல், ஒரு வானவில் போன்றது. வானவில் எப்படித் திடீரெனத் தோன்றி வர்ணஜாலங்களைக் காட்டி எம்மையெல்லாம் சந்தோஷப்படுத்திவிட்டு மறைந்து விடுகிறதோ... காதலும் அப்படித்தான். ஆனாலும் காதலுக்கும் காதலிக்குமொரு உள்ளத்திற்குமாய் காத்திருப்பது சுகம்தான் போலும்??? (எங்கேயோ படித்த ஞாபகம்)
காதலுக்கு வேறு சில விளக்கங்களும் இருக்கின்றன. காதல் வெங்காயம் போன்றது... வெளியில் அழகாக இருக்கும். உள்ளே (உரித்து) பார்த்தால் எதுவுமே இருக்காது... கண்ணீரில் தான் கொண்டுபோய் விடும்??? காதல் 'சுயிங்கம்' போன்றது. ஆரம்பத்தில் இனிக்கும். போகப்போக சப்பென்று போய்விடும். காதல் கழட்டிப்போட்ட செருப்பு மாதிரி. அளவாயிருந்தா மாட்டிக்கலாம்... இது ஒவ்வொருவரும் காதலை எப்படி எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. அவரவர்களுக்கு அது அப்படியே இருக்கும்...
காதல் அமைதியாகவே வருகிறது. அது வரும்போது எந்தவிதமான ஆர்ப்பாட்டங்களோ அறிவிப்புக்களோ மின்னல்களோ இல்லாமல்தான் வருகிறது. காதலென்பது இந்த உலகத்தில் நிறைந்திருக்கும் கவித்துவமான ஒரு சக்தி... காதல் ஒரு ஈர்ப்பு... அது சத்தியமானது... சுயஒழுக்கமானது... மறுக்க முடியாதது... சுதந்திரமானது... கட்டுப்படுத்த முடியாதது...
காதலினால் எதை அடைய முடியும்??? மகிழ்ச்சி!!! (Happiness), ஆத்ம திருப்தி!!! (Satisfaction of the Soul), அனுபவம்!!! (Experience) இன்னும் சொல்லப் போனால் வலிகள்!!! பெரும்பாலான சந்தர்ப்பங்களில்...!!! (Pain) யாரோ ஒருவர் எங்களுக்காக அக்கறை எடுத்துக்கொள்கிறார் என்றோ எங்களைபற்றி நினைத்துக் கொண்டிருக்கிறார் என்றோ நாங்கள் உணர்கிற போது காதல் என்பது நிச்சயமாக ஒரு உன்னதமான உணர்வுதான்... அது இரண்டு ஆத்மாக்களின் முழுமையான ஒன்றிப்பு... காதல் என்பது கொஞ்சமாகமோ அல்லது அதிகமாகவோ எல்லோருக்கும் முக்கியமானது தான்... ஒவ்வொருவருக்கும் தேவையானது காதலே...!!!
காதலில் உங்கள் இணையின் நம்பிக்கைகள், விருப்பு வெறுப்புக்கள் வித்தியாசமான பழக்கவழக்கங்களை மதித்து நடவுங்கள். ஆழமான அர்த்தமுள்ள உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். எதிர்மறையானவற்றைத் தவிர்த்து எப்பொழுதும் இணைந்து பயணிக்க முயற்சி செய்யுங்கள். காதலில் உங்கள் இணையின் மகிழ்ச்சி உங்கள் மகிழ்ச்சிக்கு இன்றியமையாதது...
சிலர் காதலில் தோற்று(???) விட்டால், வாழ்க்கையே தொலைந்து போய்விட்டது போல் கவலைப்படுகின்றார்கள். உண்மையில் காதலென்பது வாழ்க்கையின் ஒரு அழகான அற்புதமான பகுதி மட்டுமே... காதலே வாழ்க்கையாகிவிடாது. காதலில் தோற்று விட்டோம் என்று கவலையோடு இடிந்து போய் உட்கார்ந்து விடுவது, கண்ணாடி பொம்மை உடைந்து விட்டதேயென்று சாப்பிட மறுத்து அடம்பிடிக்கும் சின்னஞ்சிறிய குழந்தையின் செயலைப் போன்றது... (எங்கேயோ படித்த ஞாபகம்)
சுவாமி விவேகானந்தரின் அறிவுரைகளிலிருந்து... ஒருமுறை நான் எனது சிறுபராயத்து தோழியைச் சந்தித்தேன். நாங்கள் ஒரு தடாகத்தின் கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது அவள் சிறிதளவு நீரை தன்னுடைய உள்ளங்கையில் நிரப்பி அதை எனக்கு முன்பாக நீட்டியபடியே சொன்னாள்... 'எனது கையில் தேங்கியுள்ள நீரை கவனமாகப் பாருங்கள். இது காதலை குறிப்புணர்த்துகிறது... உங்களுடைய கையை அக்கறையுடன் திறந்து வைத்து அதை அங்கேயே இருப்பதற்கு எவ்வளவு நீண்ட காலம் அனுமதிக்கிறீர்களோ, எப்பொழுதும் அது அங்கேயே இருக்கும். ஆனால், உங்கள் விரல்களை முழுவதுமாக மூடி அதை உங்களுடையதாக்க முயன்றீர்களானால், அது தான் கண்டுபிடிக்கிற முதல் இடைவெளியூடாக வெளியேறவே செய்யும்.

பெரும்பாலானவர்கள் காதலில் விடும் மிகப்பெரிய தவறு இதுதான். அவர்கள் அதை சொந்தமாக்க முயற்சிக்கிறார்கள். அதிகாரம் செய்ய முயற்சிக்கிறார்கள். எதிர்பார்க்கிறார்கள்... எனவே காதல் உங்களை விட்டு விலகிப் போகிறது... காதல் சுதந்திரமானது... நீங்கள் அதனுடைய இயல்பை மாற்றமுடியாது... உங்கள் அன்புக்குரியவர்களை சுதந்திரமானவர்களாக இருக்க விடுங்கள். அள்ளிக் கொடுங்கள்... எதிர்பார்க்காதீர்கள்... அறிவுரை சொல்லுங்கள்... கட்டளை இடாதீர்கள்... அன்பாய் கேளுங்கள்... அதிகாரம் பண்ணாதீர்கள்...

ஆதலால் நண்பர்களே, காதலியுங்கள்... காதலிக்கப்படுங்கள்... இந்தப் பூமியையே காதலால் நிரப்புங்கள்...

5 comments:

தேவன் மாயம் said...

ஆதலால் நண்பர்களே, காதலியுங்கள்... காதலிக்கப்படுங்கள்... இந்தப் பூமியையே காதலால் நிரப்புங்கள்...

நல்லா எழுதியுள்ளீர்
தேவா..

தேவன் மாயம் said...

அருள்கரன்,
வலைச்சரத்தில்
உங்களைப்பற்றி
எழுத உள்ளேன்.
வலைச்சரம் வந்து
கருத்து தருக..
தேவா.

ஆதவா said...

காதல் வெங்காயம் போன்றது... வெளியில் அழகாக இருக்கும். உள்ளே (உரித்து) பார்த்தால் எதுவுமே இருக்காது... கண்ணீரில் தான் கொண்டுபோய் விடும்???

ஹா ஹா... ரொம்ப ரசித்தேனுங்க.. வெங்காயத்தை ஒரு நிலைக்கு மேல உரிக்கிறது சிரமமா இருக்கும்... (சின்ன வெங்காயம்) காதலும் அதுமாதிரிதான்.. சிரமமான வேலை...


காதல் 'சுயிங்கம்' போன்றது. ஆரம்பத்தில் இனிக்கும். போகப்போக சப்பென்று போய்விடும்.

காதல் சுயிங்க மாதிரிதான்... நீங்க என்னதான் கடிச்சு மென்னு அரைச்சாலும் அது கரையாது.... நீங்க கடைசி வரைக்கும் மென்னுகிட்டே இருக்கணும்... அதைவிட, பல்லு சுத்தமாகும்...

காதல் கழட்டிப்போட்ட செருப்பு மாதிரி. அளவாயிருந்தா மாட்டிக்கலாம்...

சில சமயம் செருப்புகள் கூட பேசலாம்... கன்னத்தில்...

நல்லா ரசிச்சேனுங்க... அதிலும் அந்த சுட்டியின் பதிலில் விபரீதம் இல்லாமல் இருந்ததே!!!

எப்படியெல்லாம் மீடியா நம்மளை மாத்துது பாருங்க....

Arulkaran said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவா... மன்னிக்கவும். தாமதமாகிவிட்டது. வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி...

Arulkaran said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆதவா... உங்கள் இரசனைக்கு நன்றி. நீங்கள் ஒரு நல்ல காதல் இரசிகன் போல...!!!

Post a Comment